28/01/2026
All India Save Education Committee - Tamilnadu
To uphold Scientific, Secular, and Democratic Education for All. developing movement involving teach
28/01/2026
24/12/2025
நமது மதுரை கருத்தரங்கம்...
அறியாமையை அகற்றுவதற்கும், சுதந்திரத்தை வளர்ப்பதற்கும், சனநாயகத்தின் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் மிகவும் வலிமை வாய்ந்த சக்தியே கல்வி. இன்று நமது தேசத்தின் இந்தத் தூண் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் கல்வி ஏழைகளிடமிருந்து விலகி, சிலரின் சலுகையாக மாற்றப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் 79 வது ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் போது, நமது மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள், அவர்கள் வேண்டிநின்ற ஒரு நியாயமான, சமமான, சனநாயக கல்வி முறை ஆகியன ஆபத்தில் உள்ளதைக்காண்கிறோம்.
கோவிட்-19 நெருக்கடியின் போது பொது விவாதமும் நாடாளுமன்ற விவாதமும் இல்லாமல் திணிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020, தனியார்மயமாக்கத்தையும், வணிகமயமயமாக்கத்தையும், பாலர் பள்ளி முதல் ஒன்றியம் வரை கல்வியை வகுப்புவாதமயமாக்குவதை ஊக்குவிக்கிறது. இது வரை வரலாற்றில் இல்லாதவாறு கல்வி அதிகாரவகையில் மத்தியப்படுத்தப்படுகிறது. இதை செய்து முடிக்க HECI மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்வி வரவுசெலவுத் திட்டங்களில் கடுமையான வெட்டுகள் இந்திய கல்வி முறையின் முதுகெலும்பான பொது கல்வி நிறுவனங்களை மூடுவதற்கு இட்டுச் செல்கின்றன. நாடு முழுக்க பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக 1.22 கோடி மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடைநிற்றல் ஆகி வெளியேறிவிட்டனர் என்று ஒன்றிய அரசின் UDISE 2023-2024 அறிக்கை தெரிவித்துள்ளது. அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாத வட்டார மொழிகள் மற்றும் ஆங்கிலம் இரண்டும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன. "இந்தியமயமாக்கல்" என்ற போர்வையின் கீழ், ‘பிளவுபடுத்தும், பகுத்தறிவற்ற அறிவியலற்ற உள்ளடக்கம்’ பாடத்திட்டத்திற்குள் திணிக்கப்பட்டு, கல்வியின் மதச்சார்பற்ற, அறிவியல் தன்மையை அச்சுறுத்துகிறது.
இதை எதிர்கொள்ள, அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி (AISEC ) கடந்த ஐந்து ஆண்டுகளில், கருத்தரங்குகள், மாநாடுகள், விவாதங்கள், தர்ணாக்கள் மற்றும் பேரணிகளை ஏற்பாடு செய்து நாடு தழுவிய இயக்கத்தை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கைகோர்த்துள்ளனர். அவர்களின் கூட்டு ஞானத்தை அடித்தளமாகக்கொண்டு 'மக்கள் கல்விக் கொள்கை (PEP) 2025' வரைவை அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி வடிவமைத்துள்ளது. இக்கொள்கை அறிவியல், மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் உலகளாவிய கல்வி முறைக்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகும். மக்கள் மீது திணிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை2020 போலல்லாமல், மக்களின் தீவிர பங்கேற்புடன் மக்களின் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது. கருத்துக்களைப் பெறுவதற்காக 'வரைவு மக்கள் கல்விக்கொள்கை', 22 மே 2025 முதல் பொதுத்தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 24 அன்று பெங்களூருவில் உள்ள ராமையா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அபெக்ஸ் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க மக்கள் நாடாளுமன்றத்தால் இறுதி செய்யப்படும்.
இவையெல்லாம குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்காக சென்னையில் 27, டிசம்பர் 27, 2025, காலை 10.30 மணிக்கு, எழும்பூர் ஜீவனஜோதி (ICSA) அரங்கத்தில் பொதுக்கல்வி மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் உரையாற்றுகின்றனர். முயற்சி திருவினையாக்கும் என அறிவோம். உங்கள் ஒவ்வொருவரையும் நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
22/12/2024
அனைவரும் வருக... 🙏
அறிவீட்டாலும் அறிவூட்டலும் - பேரா ஜவகர் நேசன்,
புத்தக வெளியீட்டு விழா.
கல்வியியல் தத்துவங்கள் குறித்த ஆய்வுகள் நம் மொழியில் மிகக்குறைவாகவே வெளிவந்திருக்கின்றன. அதற்கான சரித்திரக் காரணங்களும் இருக்கின்றன.
மேற்குலகில் முழுவீச்சுடன் ஏறத்தாழ 300 வருடங்கள் நடைபெற்ற மறுமலர்ச்சி இயக்கம் நவீன தேசங்களையும் நவீன மனிதர்களையும் தோற்றுவித்திருந்தது. மிக்கேல் ஏஞ்சலோ, டாவின்சி, வெசாலியுஸ், கோப்பர்நிக்கஸ், புருனோ, டைகோ பிராகே, கெப்ளர், கலிலியோ, பேகன், டெக்கார்ட் , பாயில், ஹூக், நியூட்டன், லெய்ப்பினிட்ஸ் கேவன்டிஷ், வால்டேர், டி ஆளெம்பெர்ட் போன்ற எண்ணற்ற ஆளுமைகள் அறிவியலிலும் சமூக அறிவியலிலும், நுண்கலைகளிலும் மறுமலர்ச்சி இயக்கம் மூலம் தோன்றியிருந்தனர். அதுமட்டுமல்ல, இவர்கள் தோற்றுவித்த பல்துறை அறிவு, அவைகளைப் பெறும் முறைகள், அதற்கான காரண விளைவு சிந்தனை முறைகள், காரணவிளைவு முறைமைக்கான தர்க்கம் ஆகியவைகள் ஜான் லாக், டேவிட் ஹ்யூம், இம்மானுவேல் காண்ட், ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகிய மகத்தான மனிதர்களால் நுண்மைப்படுத்தப்பட்டு (abstraction) பொதுமைப் படுத்தப்பட்டன (generalisation). இந்த மொத்த அறிவாதாரங்களையும் மேற்கத்திய கல்விமுறை முழுமையாக உட்கிரகித்துக்கொண்டது. இதன்விளைவாகவே ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியற்பூர்வ பொதுக்கல்விமுறை மேற்குலகில் தோன்றியது.
இந்தியத் துணைக்கண்டத்திலும் மறுமலர்ச்சி இயக்கம் பெரும் ஆற்றலுடன்தான் தோன்றியது. அறிவியல்பூர்வ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் கல்விக்காக ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நடத்திய பெருமுயற்சியின் விளைவாக பிரபுல்ல சந்திரா, ஜெகதீஷ் சந்திரா, இராமன், மேகநாத் சாகா, சத்யேந்திரநாத், தாகூர், பூலே தம்பதிகள் போன்ற மகத்தான ஆளுமைகள் தோன்றினார்கள் என்பது மெய்தான். பெரும் சிக்கல் மிகுந்த அந்நிய காலனி ஆட்சியில் தோன்றிய இந்திய மறுமலர்ச்சி இயக்கம் அதன்பின் உடனடியாகத் தோன்றிய இந்துமத மீள் இயக்கத்தின்( Hindu revivalism) தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் திணறி குன்றிப்போனது நமக்கு கெடுவாய்ப்பை ஏற்படுத்தியது. ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியற்பூர்வ பொதுக்கல்விமுறை இந்தியாவில் பெரும்பாலும் கனவாகவே போய்விட்டது.
கடந்த 75 ஆண்டுகளாக மறுமலர்ச்சிக்கான தேவைகள் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு, 'சுதந்திர சிந்தனைகளும் உண்மையைத் தேடும் அறமும் ஒருங்கே அடங்கியுள்ள' எண்ணற்ற படைப்புகள் வேண்டுமென காலம் கேட்கும் இத்தருணத்தில் கல்வியாளர் பேரா லெ.ஜவஹர் நேசன் அவர்கள் எழுதியுள்ள 'அறிவீட்டலும் அறிவூட்டலும்' எனும் அற்புதப் படைப்பு தமிழில் வெளிவருகிறது.
தமிழ் படைப்புலகில் இது ஒரு மைல்கல். அறிவீட்டலுக்கும் சமூகத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகளை முதல் இரு அதிகாரங்களில் ஆய்வுசெய்கிறது இந்நூல். பின்பு 2500 ஆண்டு தமிழக வரலாற்றை மூன்று வகையாக காலத்தால் பிரித்து தொல்காப்பியக்காலத்தில் அறிவீட்டல் அக்காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் எவ்வளவு உயர்ந்ததாகவுள்ளது என்பதை எண்ணற்ற சான்றுகளுடன் விளக்குகிறது. அடுத்த அதிகாரம் சமண பௌத்த அறநெறிக்காலத்தில் அறிவீட்டல் எவ்வாறு அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறது என்பதை பெரும் நுட்பத்துடன் விளக்குகிறது. வளரும் அதேநேரத்தில் அக்காலகட்டத்தின் ஊடே தோன்றும் வைதீகம் வீழ்ச்சிக்கான விதைகளை எங்கே பொதித்திருந்தன என்றும் விளக்குகிறது. அடுத்த ஐந்தாம் அதிகாரம் வைதீகம் எவ்வாறு வளர்ச்சிபெறுகிறது என்றும் அதன் விளைவாக அறிவீட்டல் எத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகிறது என்பதை காட்டுகிறது. அடுத்த அதிகாரம் ஆங்கிலேய காலனி ஆட்சிக்காலத்தில் அறிவீட்டு முறை எவ்வளவு குழப்பத்திற்கு உள்ளாகியது என்பதையும் இறுதி அதிகாரம் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் எவை என்பது குறித்தும் விளக்குகிறது.
பெரும் ஆய்விற்கான முனைக்கற்களை நடும் இந்நூல், நலம்பயக்கும் உரையாடல்களையும் விவாதங்களையும் தோற்றுவிக்கும். பெரும் சிந்தனையில் நம்மை ஆழ்த்தும். நாம் ஒவ்வொருவரும் வகிக்கவேண்டிய சமூக பாத்திரம் என்ன என்ற கேள்வியை நம்முள் ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும். பெரும் ஆபத்தை தனக்குள் கொண்டிருக்கும் தேசியக்கல்வி கொள்கை 2020 ஐ எதிர்கொள்ளும் சிந்தனை ஆற்றலையும் அமைப்பாக ஒன்றுதிரள வேண்டிய அவசியத்தையும் மக்கள் அனைவரையும் உணரச்செய்யும்.
03/12/2024
Click here to claim your Sponsored Listing.
26/11/2024